திருஞானசம்பந்தர் தேவாரம்
இரண்டாம் திருமுறை
2.22 திருக்குடவாயில்
பண் - இந்தளம்
திகழுந் திருமா லொடுநான் முகனும்
புகழும் பெருமான் அடியார் புகல
மகிழும் பெருமான் குடவா யில்மன்னி
நிகழும் பெருங்கோ யில்நிலா யவனே.
1
ஓடந் நதியும் மதியோ டுரகம்
சுடுஞ் சடையன் விடைகொல் கொடிமேல்
கூடுங் குழகன் குடவா யில்தனில்
நீடும் பெருங்கோ யில்நிலா யவனே.
2
கலையான் மறையான் கனலேந் துகையான்
மலையா ளவள்பா கம்மகிழ்ந் தபிரான்
கொலையார் சிலையான் குடவா யில்தனில்
நிலையார் பெருங்கோ யில்நிலா யவனே.
3
சுலவுஞ் சடையான் சுடுகா டிடமா
நலமென் முலையாள் நகைசெய் யநடங்
குலவுங் குழகன் குடவா யில்தனில்
நிலவும் பெருங்கோ யில்நிலா யவனே.
4
என்றன் உளமே வியிருந் தபிரான்
கன்றன் மணிபோல் மிடறன் கயிலைக்
குன்றன் குழகன் குடவா யில்தனில்
நின்ற பெருங்கோ யில்நிலா யவனே.
5
அலைசேர் புனலன் னனலன் னமலன்
தலைசேர் பலியன் சதுரன் விதிருங்
கொலைசேர் படையான் குடவா யில்தனில்
நிலைசேர் பெருங்கோ யில்நிலா யவனே.
6
அறையார் கழலன் னழலன் னியலிற்
பறையாழ் முழவும் மறைபா டநடங்
குறையா அழகன் குடவா யில்தனில்
நிறையார் பெருங்கோ யில்நிலா யவனே.
7
வரையார் திரள்தோள் அரக்கன் மடியவ்
வரையா ரவொர்கால் விரல்வைத் தபிரான்
வரையார் மதில்சூழ் குடவா யில்மன்னும்
வரையார் பெருங்கோ யில்மகிழ்ந் தவனே.
8
பொன்னொப் பவனும் புயலொப் பவனுந்
தன்னொப் பறியாத் தழலாய் நிமிர்ந்தான்
கொன்னற் படையான் குடவா யில்தனில்
மன்னும் பெருங்கோ யில்மகிழ்ந் தவனே.
9
வெயிலின் நிலையார் விரிபோர் வையினார்
பயிலும் முரையே பகர்பா விகள்பாற்
குயிலன் குழகன் குடவா யில்தனில்
உயரும் பெருங்கோ யிலுயர்ந் தவனே.
10
கடுவாய் மலிநீர் குடவா யில்தனில்
நெடுமா பெருங்கோ யில்நிலா யவனைத்
தடமார் புகலித் தமிழார் விரகன்
வடமார் தமிழ்வல் லவர்நல் லவரே.
11
திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தர் தேவாரம்
இரண்டாம் திருமுறை
2.58 திருக்குடவாயில்
பண் - காந்தாரம்
கலைவாழும் அங்கையீர் கொங்கையாருங் கருங்கூந்தல்
அலைவாழுஞ் செஞ்சடையில் அரவும்பிறையும் அமர்வித்தீர்
குலைவாழை கமுகம்பொன் பவளம்பழுக்குங் குடவாயில்
நிலைவாழுங் கோயிலே கோயிலாக நின்றீரே.
1
அடியார்ந்த பைங்கழலுஞ் சிலம்புமார்ப்ப அங்கையில்
செடியார்ந்த வெண்டலையொன் றேந்தியுலகம் பலிதேர்வீர்
குடியார்ந்த மாமறையோர் குலாவியேத்துங் குடவாயிற்
படியார்ந்த கோயிலே கோயிலாகப் பயின்றீரே.
2
கழலார்பூம் பாதத்தீர் ஓதக்கடலில் விடமுண்டன்
றழலாருங் கண்டத்தீர் அண்டர்போற்றும் அளவினீர்
குழலார வண்டினங்கள் கீதத்தொலிசெய் குடவாயில்
நிழலார்ந்த கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே.
3
மறியாருங் கைத்தலத்தீர் மங்கைபாக மாகச்சேர்ந்
தெறியாரும் மாமழுவும் எரியுமேந்துங் கொள்கையீர்
குறியார வண்டினங்கள் தேன்மிழற்றுங் குடவாயில்
நெறியாருங் கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே.
4
இழையார்ந்த கோவணமுங் கீளும்எழிலார் உடையாகப்
பிழையாத சூலம்பெய் தாடல்பாடல் பேணினீர்
குழையாரும் பைம்பொழிலும் வயலுஞ்சூழ்ந்த குடவாயில்
விழவார்ந்த கோயிலே கோயிலாக மிக்கீரே.
5
அரவார்ந்த திருமேனி யானவெண்ணீ றாடினீர்
இரவார்ந்த பெய்பலிகொண் டிமையோரேத்த நஞ்சுண்டீர்
குரவார்ந்த பூஞ்சோலை வாசம்வீசுங் குடவாயிற்
திருவார்ந்த கோயிலே கோயிலாகத் திகழ்ந்தீரே.
6
பாடலார் வாய்மொழியீர் பைங்கண்வெள்ளே றூர்தியீர்
ஆடலார் மாநடத்தீர் அரிவைபோற்றும் ஆற்றலீர்
கோடலார் தும்பிமுரன் றிசைமிழற்றுங் குடவாயில்
நீடலார் கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே.
7
கொங்கார்ந்த பைங்கமலத் தயனுங்குறளாய் நிமிர்ந்தானும்
அங்காந்து தள்ளாட அழலாய்நிமிர்ந்தீர் இலங்கைக்கோன்
தங்காதல் மாமுடியுந் தாளுமடர்த்தீர் குடவாயில்
பங்கார்ந்த கோயிலே கோயிலாகப் பரிந்தீரே.
8
இப்பதிகத்தில் ஒன்பதாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
9
தூசார்ந்த சாக்கியருந் தூய்மையில்லாச் சமணரும்
ஏசார்ந்த புன்மொழிநீத் தெழில்கொள்மாடக் குடவாயில்
ஆசாரஞ் செய்மறையோர் அளவிற்குன்றா தடிபோற்றத்
தேசார்ந்த கோயிலே கோயிலாகச் சேர்ந்தீரே.
10
நளிர்பூந் திரைமல்கு காழிஞான சம்பந்தன்
குளிர்பூங் குடவாயிற் கோயில்மேய கோமானை
ஒளிர்பூந் தமிழ்மாலை உரைத்தபாட லிவைவல்லார்
தளர்வான தானொழியத் தகுசீர்வானத் திருப்பாரே.
11
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com